தமிழகத்தில் மொழிப்போராட்டத்துக்கான களத்தை அமைக்க வேண்டாம்: ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்


தமிழகத்தில் மொழிப்போராட்டத்துக்கான களத்தை அமைக்க வேண்டாம்: ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 6 Sep 2019 11:45 PM GMT (Updated: 6 Sep 2019 11:10 PM GMT)

தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் நடவடிக்கைகளால், ரெயில்வே வாரியம் தமிழகத்தில் மொழிப் போராட்டத்துக்கான களத்தை அமைத்துத்தர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு நிறுவனமான ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரெயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூறு சதவீதம் ‘அப்ஜெக்டிவ்’ கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது என ரெயில்வே வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் போது, ரெயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அதேபோல் ‘குரூப் சி’ பதவிகளுக்கான தேர்வுகளை, ஆங்கிலத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தவர், இந்தி மொழியில் சில கேள்விகளுக்கு தேர்வு எழுதி இருந்தால் விருப்பம் தெரிவித்த ஆங்கிலம் தவிர, வேறு மொழியில் எழுதிய கேள்விகளுக்கு மதிப்பெண் போட வேண்டியதில்லை என்றும், இந்தியில் எழுத விருப்பம் தெரிவித்து விட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதியிருந்தால் அதற்கு மதிப்பெண் போட வேண்டும் என்றும் ரெயில்வே வாரியம் கூறியிருப்பது, ‘ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வஞ்சக எண்ணத்துடன் ரெயில்வே வாரியம் செயல்படுவதைக் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரெயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம், பஞ்சமா பாதகம் ஆகும். ரெயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித்திட்டமாகவே இதை தி.மு.க. கருதுகிறது.

இந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ் மொழிக்கு துரோகம் செய்யும் ரெயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை தி.மு.க. நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. தபால்துறை தேர்வு விவகாரத்தில் ஐகோர்ட்டில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரெயில்வேயில் நடைபெறும் துறை சார்ந்த பொதுப்போட்டி தேர்வுகள் அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், ‘குரூப் சி’ பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளில் ‘குரூப் சி’ தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரெயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டும் என்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story