ஆசிரியர் தகுதி தேர்வு; தேர்வு வாரியத்திற்கு ரூ.20 கோடி வருவாய்


ஆசிரியர் தகுதி தேர்வு; தேர்வு வாரியத்திற்கு ரூ.20 கோடி வருவாய்
x
தினத்தந்தி 9 Sep 2019 11:50 AM GMT (Updated: 9 Sep 2019 11:50 AM GMT)

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களால் தேர்வு வாரியத்திற்கு ரூ.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை,

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வெளியிட்டது. சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினார்கள்.  ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் வெறும் 967 பேர் மட்டும் (1.16 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் செய்த பட்டியல் இனத்தவர்கள் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் செலுத்தி இருந்தனர்.  967 பேர் தேர்ச்சியுடன் தேர்வு முடிவுகள் கடும் வீழ்ச்சியாக அமைந்தாலும், விண்ணப்பங்கள் மூலம், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story