ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு: ‘சீட்பெல்ட்’ போடாமல் சென்றதாக போலீசார் அபராதம் விதித்து - ரசீது


ஹெல்மெட் அணியாமல்  மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு: ‘சீட்பெல்ட்’ போடாமல் சென்றதாக போலீசார் அபராதம் விதித்து - ரசீது
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 9:37 PM GMT)

கோவை அருகே ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் போடாமல் சென்றதாக போலீசார் ரசீது வழங்கி உள்ளனர்.

கோவை,

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவையை அடுத்த தமிழக- கேரள எல்லைப்பகுதியில் உள்ள வேலந்தாவளத்துக்கு கடந்த 7-ந் தேதி சென்றார்.

பின்னர் அவர் அன்று மாலையில் வீடு திரும்பினார். அவர் வேலந்தாவளம் அருகே வந்தபோது போக்குவரத்து போலீசார் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கார்த்திக்கை தடுத்து நிறுத்தினார்கள்.

தொடர்ந்து போலீசார் அவருடைய ஓட்டுனர் உரிமம், வாகன புத்தகத்துக்கான நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றை கேட்டனர். அவை அனைத்தையும் கார்த்திக் முறையாக வைத்திருந்ததால், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.100 அபராதம் விதித்தனர். அந்த தொகையையும் அவர் உடனே போலீசாரிடம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டார்.

ஆனால் அவர் உடனே அந்த ரசீதை பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் அந்த ரசீதை பார்த்தபோது, ஹெல்மெட் அணியவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக தவறுதலாக சீட்பெல்ட் போட வில்லை என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது போலீசார் வழங்கிய அந்த ரசீதில், எந்த வகையான வாகனம் என்று குறிப்பிடும் இடத்தில் மோட்டார் சைக்கிளின் பெயரும், எதற்காக அபராதம் என்று குறிப்பிடும் இடத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு பதிலாக சீட் பெல்ட் போடவில்லை என்றும் தவறுதலாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டு உள்ளனர். அந்த ரசீதின் கீழ்ப்பகுதியில் அபராதம் விதித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கையெழுத்து போட்டு சீலும் வைத்து உள்ளார். இந்த ரசீது முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் இளைஞர்கள் பலர் போலீசாரின் இந்த செயலை கிண்டல் செய்து பதிவிட்டு உள்ளனர்.

Next Story