மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை போல கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு உயர்கல்வி துறை ஆலோசனை


மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை போல கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு உயர்கல்வி துறை ஆலோசனை
x
தினத்தந்தி 11 Sep 2019 8:30 PM GMT (Updated: 11 Sep 2019 7:18 PM GMT)

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு உயர்கல்வி துறை ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறது.

சென்னை, 

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை போல கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு உயர்கல்வி துறை ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறது.

கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கும், என்ஜினீயரிங் மற்றும் சட்டக்கல்லூரி போன்ற படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வி துறை திட்டமிட்டு வருவதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பின்னர், அவரே கலந்தாய்வு நடத்துவது என்பது சாத்தியப்படாத ஒன்று என்றும் பேட்டியளித்தார்.

இந்த நிலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உயர்கல்வி துறை மீண்டும் ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதுவரை அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

ஆய்வுக்கூட்டம்

இதுதொடர்பாக அண்மையில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர்கல்வி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதில் பல்வேறு முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி மயமாக்குவது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆலோசனை

மேலும், மாநிலத்தின் 5 பல்கலைக்கழகங்களை நாட்டின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இடம்பெற செய்வதற்கும், உலகின் சிறந்த 1,000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் பெயரை இடம்பெற செய்வதற்கும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களின் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பாக திறன்களை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக அந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளை போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலாளரின் பார்வைக்கு...

இந்த ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையும் தலைமை செயலாளரின் பார்வைக்கு, உயர்கல்வி துறை அனுப்பி இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை செயலாளர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கும்போது, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக உயர்கல்வி துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது அது ஆலோசனையில் தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு வழிமுறைகள் அதிகம் இருக்கிறது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நடைமுறைப்படுத்த முடியும். அது நீண்டகால செயல்பாடு’ என்றனர்.

அரசு கல்லூரிகளுக்கு மட்டுமா?

இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் ஜெ.காந்திராஜன் கூறுகையில், ‘கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை என்பது நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. இப்போது ஆலோசிக்கப்பட்டு இருப்பது அரசு கல்லூரிகளுக்கு மட்டுமா?. அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளும் அதற்கு உட்பட்டதா?, இதை எவ்வாறு செயல்படுத்துவார்கள்? என்பது குறித்து அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.

Next Story