மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு: பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்


மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு: பச்சை நிறத்தில் மாறிய பாம்பன் கடல்நீர் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 8:37 PM GMT)

பாம்பன் பகுதியில் நேற்று கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியது. மேலும் மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

ராமேசுவரம், 

பாம்பன் பகுதியில் நேற்று கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியது. மேலும் மீன்களும் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

பச்சை நிறத்தில் கடல்நீர்

ராமேசுவரத்தில் பாம்பன் குந்துகால் மற்றும் சிங்கிலி தீவு முதல் குருசடை தீவு வரையிலான கடல் பகுதி நேற்று பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. காலையில் லேசான பச்சை நிறத்தில் இருந்த கடல்நீர், பகல் நேரத்தில் கரும் பச்சையாக மாறியதுடன், பாசி படர்ந்த நீர் போன்றும் தோற்றம் அளித்தது.

பல வகை மீன்களும் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. தகவல் அறிந்ததும் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடல் நீரை ஆராய்ச்சிக்காக பெரிய டப்பாக்களில் சேகரித்ததுடன், இறந்து கிடந்த மீன்களையும் எடுத்து சென்றனர். பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல்நீரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

காரணம் என்ன?

கடல்நீர் பச்சை நிறமாக மாறியதற்கான காரணம் குறித்து மண்டபம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும்போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது. ஆனால் தற்போது கடல் நீரோட்டம் குறைவாக இருப்பதால் தான் பாம்பன் கடல்நீர் பச்சை நிறத்தில் தெளிவாக தெரிகிறது.

அந்த வகை பாசியானது கடல்நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன.

இயல்பு நிலைக்கு வரும்

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கடலானது அதிகமாக பச்சை நிறமாக மாறியுள்ளது. பாம்பனில் கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகை மீன்கள் தான் அதிகம். இதுபற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தால்தான் காரணத்தை அறிய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story