கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண் பொய் புகார் கொடுக்க வைத்தது விசாரணையில் அம்பலம்


கள்ளக்காதலனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண் பொய் புகார் கொடுக்க வைத்தது விசாரணையில் அம்பலம்
x
தினத்தந்தி 11 Sep 2019 9:15 PM GMT (Updated: 11 Sep 2019 9:12 PM GMT)

தனது கள்ளக்காதலனை கைவிட முடியாத பெண், அவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்.

தஞ்சை, 

தனது கள்ளக்காதலனை கைவிட முடியாத பெண், அவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இதற்காக அவர் தனது மகள் மூலம் பொய் புகார் கொடுக்க வைத்து போலீசில் சிக்கிக்கொண்டார்.

19 வயது இளம்பெண்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் என்னிடம் பல நாட்களாக பழகினார். நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றினோம்.

இந்த நிலையில் அவர் என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அவரது திருமணம் 12-ந் தேதி (இன்று) நடைபெற உள்ளது. எனவே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை

இந்த புகார் மனுவை திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிய போலீஸ் சூப்பிரண்டு, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் நேற்று போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்

விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அந்த இளம்பெண், திடீரென தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார். உடனே போலீசார், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினர்.

இதற்கிடையே அந்த பெண் புகார் கூறிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், அந்த பெண்ணை விரும்பவில்லை என்றும், அந்த பெண்ணின் தாயாரை தான் விரும்பினேன் என்றும் கூறினார்.

அவர் கூறுவது உண்மையா? என்று அந்த பெண்ணின் தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபருக்கும், தனக்கும் கள்ளக்காதல் இருந்ததை அந்த இளம்பெண்ணின் தாயார் ஒப்புக்கொண்டார்.

பொய் புகார்

தனது கள்ளக்காதலை தொடர வசதியாக தன் மகளுக்கும், தனது கள்ளக்காதலனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அந்த பெண், தனது மகள் மூலம் போலீசில் பொய்யாக புகார் கொடுக்க வைத்துள்ளார். ஆனால் அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகி விட்டது.

இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம், திருமண வயதில் மகள் உள்ள நிலையில் இந்த கள்ளத்தொடர்பு தேவையா? என்று அறிவுரை கூறினர். பின்னர் புகார் கொடுத்த அந்த இளம்பெண், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொள்வதாக கூறினார். இதனைத்தொடர்ந்து தாயும், மகளும் அங்கிருந்து சென்றனர்.

Next Story