தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2019 9:59 AM GMT (Updated: 12 Sep 2019 9:59 AM GMT)

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது என்றும் தமிழுக்கு தி.மு.க. தான் பேராபத்து என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நடந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் பேசும்பொழுது, வெள்ளைக்காரர்கள் வரவில்லை எனில், இந்தியா சோமாலியா போன்ற நாடாக மாறியிருக்கும். பிற மொழியை கற்று கொள்வதில் தவறில்லை. ஆனால் தாய்மொழிப்பற்று அவசியம் அதிகம் வேண்டும்.

தி.மு.க.காரர்களின் வீட்டிலேயே தமிழ் பெயர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒருவர் வீட்டில் மட்டுமல்ல, பலரின் வீட்டிலும்.

தெரிந்த நண்பரிடத்தில் உங்கள் பேத்தியா என்று கேட்டால் ஆம் என்றார். பெயர் என்ன என்று கேட்டால், அனீஷா என்கின்றனர். இன்னொருவரை கேட்டால் அவ்ஸ்வீத் என்று சொல்கின்றனர். இந்த நிலைதான் இப்போது இருக்கிறது. இது நிச்சயம் மாற வேண்டும்.
 
இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என கூறினார்.

இந்த நிலையில், சிவகாசியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.  தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறினார்.

சென்னை காசிமேடு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியில், மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிற்கு செல்பவர்கள், தமிழக அரசின் ஆலோசனையை பெற்று செல்ல வேண்டும் என்று கூறினார்.  அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது என்றும் தமிழுக்கு பேராபத்து தி.மு.க. தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story