‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு


‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ தன் பெயருக்கான விளக்கத்தையும் அளித்து மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 7:06 PM GMT)

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, 

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். தன் பெயருக்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் அ.சிதம்பரத்தின் சகோதரர் கலைவாணனின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் பெயர் சூட்டுங்கள்

மணமகனின் பெயர் முத்துவேல். தமிழ்ப்பெயர். ஆனால், மணமகளின் பெயர் ஆசிகா இது தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான்? நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.

இவ்வளவு சொல்கிறாயே மு.க.ஸ்டாலின், என்ற பெயர் என்ன தமிழ்ப்பெயரா? என்று சிலர் கேட்கலாம். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கருணாநிதி அந்தப் பெயரை எனக்கு வைத்தார். காரணம், தலைவர் கருணாநிதிக்கு கம்யூனிச கொள்கையின்மீது அளவு கடந்த பற்று உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

அதேபோல் தலைவர் கருணாநிதியின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. மேடையில் இவ்வளவு வீராவேசமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.

பெயரால் வந்த பிரச்சினை

நான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, ரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை வினோதமாக பார்த்தார்கள். விமான நிலையத்தில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு.

இங்கு திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர்கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊர், ஊராக சுற்றுகிறார்கள்

இன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கின்றது. அதற்குள் எல்லா நாட்டிற்கும் சென்று வந்துவிட வேண்டும் என்று ஒரே முடிவோடு, பிரதமர் மோடி எப்படி ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கின்றாரோ அதேபோல், இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் சுற்றி முடித்திடவேண்டும் என்று ஒரே கொள்கையோடு முதல்-அமைச்சர் சென்று வந்திருக்கிறார். அப்படி செல்லும் போது, சொந்த வேலையாக செல்கின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்லுங்கள். அதைவிடுத்து, முதலீட்டைப் பெறுவதற்காக செல்கின்றோம் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு செல்கின்றீர்களே? என்ன முதலீடு என்று அறிவியுங்கள்?.

அன்றைக்கு நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்றோம் என்றால், மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக, ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்காக, அதேபோல் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற நாங்கள் சென்றோம். அதை பெற்று வந்தும் தந்திருக்கின்றோம். வேறொன்றும் நாங்கள் கேட்கவிரும்பவில்லை. முதலீட்டை எந்தளவிற்கு பெற்றீர்கள் என்பதைப் பற்றி வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என்று தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

நல்லாட்சி

ஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்று வேலை வாய்ப்பினை கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்களே அது என்ன ஆனது?. இதற்கெல்லாம், எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?

நாட்டை குட்டிச்சுவராக்கக்கூடிய சூழ்நிலை இருந்துகொண்டிருக்கின்றது. எனவே, நான் மீண்டும் இங்கு உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது, வரப்போகும் நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்கித் தருவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாராகக்கூடிய ஒரு நிலை விரைவில் ஏற்பட்டிருக்கின்றது.

தி.மு.க. ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரப்சன் கிடையாது. ஆனால், இன்றைக்கு உங்கள் ஆட்சியில் கலெக்சன், கமிசன், கரப்சன் தான் நடந்துகொண்டிருக்கின்றது. அதனால், தான் முதலீட்டு ஒப்பந்தம் போட்டாலும், உலக முதலீட்டாளர் மாநாடு என்ற நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தாலும் அதெல்லாம் வெறும் வெட்டி வேசமாகத்தான் இருக்கின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story