‘பேனர்’சரிந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு சீல்
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபாஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்குடி கந்தன் சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பணி முடிந்து சுபாஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவிலும், ஓரத்திலும் அ.தி.மு.க. ‘பேனர்’கள் வைக்கப்பட்டு இருந்தன.
சாலையின் நடுவே இருந்த அ.தி.மு.க. ‘பேனர்’ ஒன்று திடீரென சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபாஸ்ரீ மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்தார்.
அப்போது சுபாஸ்ரீக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய சுபாஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் இது தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த மனோஜ் (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலையின் நடுவே ‘பேனர்’ கள் வைக்க எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும் அவசர அவசரமாக சாலையின் நடுவே இருந்த ‘பேனர்’கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லாரி ஓட்டுனர் மற்றும் பேனர்கள் வைத்தவர்கள் என பொதுவாக குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இளம்பெண் சுபாஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான, பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story