5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு: அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு: அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:58 AM GMT (Updated: 14 Sep 2019 11:58 AM GMT)

5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.க்கு நடத்தப்படுவது போல நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில்,  நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு  திமுக எம்.பி.கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு என்ற அதிமுக அரசின் அறிவிப்பு நமது கல்விமுறைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவால்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த சிறு வயதிலேயே இத்தனை பொது தேர்வுகளை நடத்தி அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சேர்த்து மன அழுத்தத்தையும், பயத்தையும் கொடுக்கக்கூடிய இந்த அறிவிப்பு, யாரை திருப்திபடுத்துவதற்காக வெளியிடப்படுகிறது?

மத்தியில் ஆளும் தங்களுடைய எஜமானர்களையா அல்லது இங்கு இருக்கும் மற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மடைமாற்றம் செய்யும் வேலையா? எதுவாகினும் பாதிக்கப்படப் போவது நமது எதிர்கால சந்ததியினர் தான் என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பது நாட்டை ஒருபோதும் ஒருங்கிணைக்காது என பதிவிட்டுள்ளார்.

Next Story