தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்


தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர் - நண்பர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 15 Sep 2019 9:45 PM GMT (Updated: 15 Sep 2019 8:36 PM GMT)

தூத்துக்குடியில் கப்பல் என்ஜினீயர், அவருடைய நண்பரை மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கப்பல் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

முருகேசன் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று மதியம் இவர் தெருவில் சென்றபோது, ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனை பார்த்த முருகேசன், அந்த நபரை பார்த்து, தெருவுக்குள் மெதுவாக செல்லுமாறு கூறி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.

நேற்று மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அவர், அங்கு வந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான விவேக் (40) என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர்.

அவர்கள் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் வாகன தணிக்கையின்போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story