ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 9:07 PM GMT)

ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பஸ் நிலையம் அருகே கடந்த 14-ந்தேதி நத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சித்திரைகவுண்டன்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி (வயது 30), பாறைப்பட்டியை சேர்ந்த முருகன் (39), தண்டபாணி (25), போடிக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (38), செந்துறையில் கடை வைத்திருக்கும் வியாபாரி செல்வக்குமரன் (40), மல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் (40), ராஜேந்திரன் (30) உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என்று செல்வக்குமரன் கேட்டுள்ளார். இதனால் அவரை போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 7 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

இதற்கிடையே ஊர் பெரியவர்கள் நத்தம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட 7 பேரையும் போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி, அபராதம் கட்ட சொல்வதாகவும் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் மிரட்டல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையிலான போலீசார், வியாபாரி செல்வக்குமரன் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது செல்வக்குமரனின் தந்தை ராஜேந்திரன் தனது மகனை காலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா, ராஜேந்திரனை துப்பாக்கியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கியை அவர் வாயில் வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது. பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த செல்வக்குமரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். படுகாயம் அடைந்த ராஜேந்திரன் செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை மறியல்

இதற்கிடையில் இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜாவை கண்டித்து நேற்று செந்துறையில் கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து செந்துறை பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிடித்து சென்ற செல்வக்குமரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

இதையடுத்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story