சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு


சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 9:26 PM GMT (Updated: 16 Sep 2019 9:26 PM GMT)

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர்,

மோட்டார் வாகனச்சட்டம் 1988 விதிகளின்படி ஒவ்வொரு லாரிக்கும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது விதியாகும். இதனை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து லாரியில் அதிக எடைகொண்ட கன்டெய்னர் பெட்டிகளை ஏற்ற மாட்டோம். ஒரு லாரியில் ஒரு கன்டெய்னர் பெட்டியை மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்யவேண்டும். இல்லை என்றால் 16-ந்தேதி முதல் லாரிகளை ஓட்டமாட்டோம் என்று தமிழ்நாடு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகத்திடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

ஆனால் அந்த கோரிக்கை மீது அவர்கள் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து 21 சங்கங்களை சேர்ந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ந.மனோகரன், எஸ்.ஆர்.ராஜா, எம்.எம்.கோபி ஆகியோர் கூறியதாவது:-

கன்டெய்னர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே மோட்டார் வாகனச்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு லாரியில் 20 அடி கன்டெய்னர் ஒன்று மட்டும் ஏற்றிச்செல்வோம். 16-ந்தேதிக்குள் அதற்குரிய வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் லாரிகளை இயக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் ஓடவில்லை.

இதனால் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச்சாலைகளில் லாரிகள் நீண்டவரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Next Story