5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்


5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sep 2019 9:44 PM GMT (Updated: 18 Sep 2019 9:44 PM GMT)

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிடம் 49 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார். கல்விக்கண் திறந்த காமராஜரின் புகைப்படம் பின்புறத்தில் இருக்கும் அந்த வீடியோவில் கமல்ஹாசன் கூறியதாவது:-

ஒரு தும்பியுடைய வாலில் பாராங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு கொடுமையான விஷயமோ அதைவிட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமை கட்டி வைப்பது. இந்த கல்வித்திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ, இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கும். இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.

சாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது ஒரு குழந்தை இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும்.

திரும்பப்பெற வேண்டும்

நான் 8-ம் வகுப்போடு என்னுடைய படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும், அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தி இருக்கும் பொதுத்தேர்வு மட்டும் தான் முக்கிய காரணமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள்ளளவும் பயன்தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறது.

இதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story