நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சிக்கினார் பரபரப்பு தகவல்


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சிக்கினார் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 12:00 AM GMT (Updated: 18 Sep 2019 11:03 PM GMT)

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சிக்கி உள்ளார்.

சென்னை,

இந்தியா முழுவதும் நீட் தேர்வு மூலம் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் கடந்த மாதம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். இதேபோல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வு மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர். அதில் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வந்தன.

அந்த புகார்களில் வேறு ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதியதாகவும், அவருக்கு பதிலாக சென்னையை சேர்ந்த மாணவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதனை பார்த்த கல்லூரி முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.

பேராசிரியர்கள் குழு விசாரணை

இதுகுறித்து அவர், மருத்துவமனை பேராசிரியர்கள் குழுவை கொண்டு ரகசிய விசாரணையில் ஈடுபட்டார். முதற்கட்டமாக நீட் தேர்வின் போது மாணவரின் ஹால் டிக்கெட்டில் உள்ள நபரும், கல்லூரியில் படிக்கும் மாணவரும் ஒரே நபர் தானா? என்பதை அறியும் முயற்சியில் பேராசிரியர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.

அப்போது நீட் தேர்வு எழுதியவரின் ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படத்திற்கும், கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவரின் முகத்திற்கும் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரியில் பயிலும் சென்னை மாணவரிடம் இதுகுறித்து பேராசிரியர்கள் குழுவினர் விசாரித்தனர்.

அதன் பின்னர் சென்னை மாணவரின் பெற்றோரை தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு வரவழைத்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் அந்த மாணவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், க.விலக்கு போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் குறித்து, அசோக்கிருஷ்ணன் என்பவர் எனக்கு கடந்த 11 மற்றும் 13-ந் தேதிகளில் இ-மெயில் மூலம் புகார் அனுப்பி இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் நீட் தேர்வு எழுதியவரும், தற்போது மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை மாணவரும் ஒருவர் தானா? என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்டு க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீக்கப்படுவார்

உதித் சூர்யா சென்னையை சேர்ந்தவர். நீட் தேர்வில் 385 மதிப்பெண் எடுத்து இருக்கிறார். கவுன்சிலிங் வந்த போது பழைய புகைப்படத்தை வைத்து இருந்தார்கள். அதனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நீட் தேர்வும் இவர் தான் எழுதினாரா? என்றும் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது. விசாரணை முடிவில் ஆள்மாறாட்டம் செய்து தான் தவறுதலாக மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால், அவர் சேர்ந்த மருத்துவ படிப்பு இடம் காலியானதாக அறிவிக்கப்படும். தேர்வுக்கு படித்தவர் ஒருவர், தேர்வு எழுதியவர் ஒருவர் என்றால் கண்டிப்பாக அவர் மருத்துவ படிப்பில் இருந்து நீக்கப்படுவார்.

கண்டுபிடிக்க முடியவில்லை

இதேபோல், மற்ற கல்லூரிகளிலும் ஆள்மாறாட்டம் யாராவது செய்து இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வதற்கும் உத்தரவிட இருக்கிறோம். விசாரணை முடிவுக்கு பிறகே கலந்தாய்வு முறையாக நடந்ததா? நடைபெறவில்லையா? என்பதை தெரிவிக்க முடியும். ஆள்மாறாட்டம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் படிப்பில் இருந்து விலக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பிளஸ்-2 முடித்து 3-வது ஆண்டு அவர் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். அவர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்த போது எடுத்த புகைப்படங்களை விண்ணப்பித்தின் போது கொடுத்துள்ளார். ஆகவே எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உடன் இருந்தார்.

அடுத்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும் முறை மாற்றம்

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு, மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க மாநில அரசு அறிவிப்பை வெளியிடும். அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்து உள்பட பல விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அப்படி பதிவு செய்து இருந்துமே தற்போது ஆள்மாறாட்ட புகார் எழுந்து இருக்கிறது. இதையடுத்து இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள் என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அடுத்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும்போது பெருவிரல் கைரேகை பதிய வேண்டும் என்று குறிப்பிட இருக்கிறோம். கைரேகை வைத்த பிறகே விண்ணப்பத்துக்குள் விண்ணப்பதாரர்கள் செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்குவது தொடர்பாக பேசி வருகிறோம். அதேபோல், கவுன்சிலிங் வரும்போதும் கைரேகை வைத்தால் தான் அவர்களுடைய முழுவிவரங்கள் அடங்கிய பக்கம் கணினியில் திறக்கும். புகைப்படம், கையெழுத்துடன் பெருவிரல் கைரேகையும் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார்.

Next Story