நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியில்லை; கமல்ஹாசன்


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியில்லை; கமல்ஹாசன்
x
தினத்தந்தி 22 Sep 2019 4:38 AM GMT (Updated: 22 Sep 2019 4:38 AM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது.  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்றும், வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறும் என்றும் அ.தி.மு.க. கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவது என்றும் தி.மு.க. கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்றும், வேட்பாளர் நேர்காணல் 24ந்தேதி நடக்கிறது என்றும் க. அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் என்ற நாடகத்தில் மக்கள் நீதிமய்யம் பங்கெடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story