அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி


அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி
x
தினத்தந்தி 23 Sep 2019 10:13 AM GMT (Updated: 23 Sep 2019 10:14 AM GMT)

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னையில், வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில் வெங்காய விலை தொடர்பான நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெங்காயத்தின் விலை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

வெங்காயம் பதுக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவு வெங்காய லாரிகள் சென்னை வரத்தொடங்கி உள்ளன.

வெங்காயம் விலை குறையவில்லை என்றால் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story