வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி ரேஷன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் எனவும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தினார். மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை வலுப்படுத்த கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் கருவிகளுக்காக ரூ.30.27 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு மீன்வளத்துறைக்கு ரூ.8.25 கோடியும், மொத்தம் ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story