ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு


ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2019 12:27 PM GMT (Updated: 23 Sep 2019 12:27 PM GMT)

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யாவை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். ஆனால், அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய தந்தையின் நண்பர்கள் வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆள்மாறாட்ட சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்சம் ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. பயிற்சி மையம், சம்பந்தப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் முதற்கொண்டு பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மும்பையில் சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர்.

பலர் ஆள்மாறாட்டம் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்பட்டு உள்ள நிலையில், இந்த சம்பவத்தில் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.  இதனால், இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது.  இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story