அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு; விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் நாராயணன் போட்டி
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. இன்று காலை அறிவித்துள்ளது.
சென்னை,
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார். இதுபோல் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
இதனிடையே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன்படி, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. இன்று காலை அறிவித்தது.
விக்கிரவாண்டியில் எஸ்.ஆர். முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் வெ. நாராயணன் போட்டியிடுகின்றனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. காணை ஒன்றிய செயலாளராக முத்தமிழ்ச்செல்வன் இருந்து வருகிறார்.
நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நாராயணன் இருந்து வருகிறார். நாங்குநேரியில் காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது. இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான நேரடி போட்டியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
Related Tags :
Next Story