தமிழக கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை; அமைச்சர் செல்லூர் ராஜூ


தமிழக கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்பனை; அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 25 Sep 2019 7:16 AM GMT (Updated: 25 Sep 2019 7:16 AM GMT)

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெங்காயம் பதுக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவு வெங்காய லாரிகள் சென்னை வரத்தொடங்கி உள்ளன.

வெங்காயம் விலை குறையவில்லை என்றால் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என கூறப்பட்டு இருந்தது.

இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.  இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆந்திராவில் இருந்து ரூ.30க்கு வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் ரூ.33க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Next Story