நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு


நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 26 Sep 2019 4:15 PM GMT (Updated: 26 Sep 2019 4:15 PM GMT)

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் அக்டோபர் 10-ம்தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க கோரி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தேனி,

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. 

இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.

 இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கண்டமனூர் விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து உதித் சூர்யாவை தேடி வந்தனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் உதித் சூர்யா தரப்பு மனுத் தாக்கல் செய்தது. ஆனால் மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி முன்பு ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து திருப்பதியில் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட உதித் சூர்யா, அவரது தாய் கயல்விழி தந்தை வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் தேனி சிபிசிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா தந்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும்,  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பின் விளைவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் உதித் சூர்யா தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார். 

இந்தநிலையில் நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்தியது.  2 பேரையும் அக்.10 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். உதித் சூர்யா, தந்தை வெங்கடேசன் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story