பரம்பிக்குளம்-ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காலதாமதம் கூடாது துரைமுருகன் வலியுறுத்தல்


பரம்பிக்குளம்-ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காலதாமதம் கூடாது துரைமுருகன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:36 PM GMT)

பரம்பிக்குளம்-ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காலதாமதம் இருக்கக்கூடாது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம்-ஆழியாறு

பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக-கேரள முதல்-அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டியளித்துள்ள கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் தலா 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருப்பதும், இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள பல்வேறு நதி நீர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள முதற்கட்டமாக இந்த பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதும்; 31 ஆண்டுகளை நெருங்கி விட்ட பரம்பிக்குளம் ஆழியாறு மறு ஆய்வு ஒப்பந்தம் மேலும் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசின் இசைவுடன், தமிழ்நாடு அரசினால், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் (1955-1960) உருவாக்கப்பட்டது.

ஏமாற்றம் தருகிறது

பல்வேறு கட்டங்களாக பல நிலைகளில் தி.மு.க. ஆட்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்த மறு ஆய்வு தொடர்பான பணிகள் அடுத்தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணித்துவந்த நிலையில், 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. குறிப்பாக முதல்- அமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நீண்ட அமைதி காத்து வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென விழித்து எழுந்ததைப் போல, இப்போது கேரளா முதல்-மந்திரியை சந்தித்திருப்பது வரவேற்புக்குரியது என்றாலும்;, மீண்டும் பத்து பேர் கொண்ட குழு என்று வெளிவந்துள்ள அறிவிப்பு தமிழக மக்களுக்கு குறிப்பாக மேற்கு மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது.

காலதாமதம் கூடாது

ஆகவே, மீண்டும் குழு என முதலில் இருந்து பேச்சுவார்த்தையை துவங்கி, தாமதத்திற்கு வழி ஏற்படுத்துவதற்கு காரணமாக இந்த சந்திப்பு அமைந்து விடக்கூடாது என்றும், மறு ஆய்வு ஒப்பந்தத்தை விரைந்து ஒரு குறுகிய கால வரையறைக்குள் நிறைவேற்றிட வேண்டிய பொறுப்பு துறை அமைச்சராகவும், முதல்- அமைச்சராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கேரள அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பொள்ளாச்சி, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களை மேலும் காலதாமதம் செய்யாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், அது தொடர்பாக நிலுவையில் உள்ள நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story