தீபாவளி - ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்


தீபாவளி - ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்
x
தினத்தந்தி 1 Oct 2019 11:10 AM GMT (Updated: 1 Oct 2019 11:10 AM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8 ஆயிரத்து 310 பேருந்துகளும் இம்மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்  நிருபர்களுக்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆயுதபூஜைக்கும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு, 4265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வர 4,627 பேருந்துகள் இயக்கப்படும்.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன என கூறினார்.

முன்னதாக, காஞ்சீபுரம் அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர் உட்பட 18 பணியாளர்களுக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை கோயம்பேடு சிறப்பு முன்பதிவு மையங்கள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை செயல்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற பிரபல இணையதளங்கள் மூலமாகவும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story