திருச்சி நகைக்கடை கொள்ளை : இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படைகள்


திருச்சி நகைக்கடை  கொள்ளை : இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படைகள்
x
தினத்தந்தி 2 Oct 2019 9:53 AM GMT (Updated: 2 Oct 2019 10:48 AM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருச்சி,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது.  இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் உள்ளன.

இந்நிலையில், நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.  அவற்றின் மதிப்பு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.  நகை கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  ரூ. 36 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போய் உள்ளன. குழந்தைகள் விளையாடும் விலங்குகளின் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து உள்ளனர். அந்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. நகை கடைக்குள் இருந்த  சிசிடிவி கேமிராவில அவர்கள் பதிவாகி உள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் 5ல் இருந்து 6 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 3.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

கைரேகை பதியாமல் இருக்க கொள்ளையர்கள் கையுறை அணிந்து கொள்ளையை நடத்தி உள்ளனர். மேலும் செல்லும் வழியில் மோப்ப நாய்  மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய் பொடியை  தூவிச் சென்று உள்ளனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மூன்று அடுக்குமாடி கட்டிடங்கள் கொண்ட லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள்  தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 7 தனிப்படைகளும் திருச்சியில் உள்ள தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றன.

நகைக்கடையில் பணியாற்றும் சுமார் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்களிடமும் விசாரணை நடைபெற்று  வருகிறது. 

Next Story