திருச்சி கொள்ளையும்... திருவாரூர் முருகனும் ... ஆங்கில கிரைம் தொடரை பார்த்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்


திருச்சி கொள்ளையும்... திருவாரூர் முருகனும் ... ஆங்கில கிரைம் தொடரை பார்த்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்
x
தினத்தந்தி 4 Oct 2019 12:04 PM GMT (Updated: 4 Oct 2019 12:04 PM GMT)

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான வங்கி கொள்ளை தொடர் ஒன்றை பார்த்து திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை நடந்து உள்ளது.

சென்னை,

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.  நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர்.  பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் கருதினர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில் நேற்று நடந்த வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார்.

அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார். அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. சீராத்தோப்பு சுரேஷ் குறித்த தகவல்களை போலீஸார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது.

யார் இந்த முருகன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தென்னிந்தியா முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு இதுவரை சிக்காத கொள்ளையன் முருகன் என்பது தெரியவந்தது.



நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான  வங்கி கொள்ளை தொடர் ஒன்றை பார்த்து, திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை நடந்து உள்ளது.

'Money heist'பணம் கொள்ளை என்ற தொடரின் பாணியில், வெளியில் இருந்து உதவும் புரொபசர், திருடர்களின் உடை, முகமூடி, சுவரில் துளை எனப் பல்வேறு ஒற்றுமை அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கொள்ளை சம்பவம். 

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்ட திருவாரூர் முருகன் இந்தத் தொடரை அதிகமாகப் பார்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார் எனக் காவல்துறையினரிடம் பிடிபட்ட மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

பிடிபட்டுள்ள மணிகண்டன், `` எங்களுக்கெல்லாம் பாஸ் 'திருவாரூர்' முருகன் தான். 'மணி ஹீஸ்ட்' தொடரில் வரும் புரொபசரைப் போல, முருகனும் நடமாடும் வேனிலேயே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருப்பவர்" எனத் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'திருவாரூர்' முருகன் சுவரில் துளையிட்டுத் திருட்டுச் சம்பவங்களை நிகழ்த்துவதில் பிரபலமானவர். தற்போது உடல்நிலை குன்றியநிலையில் இருக்கும் முருகன் நடமாட முடியாத சூழலில் இருக்கிறார். நடமாடும் வேன் ஒன்றில் வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

முருகன் ஒரு கொடிய நோயில் சிக்கி உள்ளார்.  அவரை  சீராத்தோப்பு ஹீரோ என அப்பகுதியில் கொண்டாடுவார்கள். கொள்ளையடிக்கும் பொருளில் பலருக்கும் உதவுவது, ஒருகொள்ளை முடித்து வந்தால் பலர் கஷ்டத்தைத் தீர்ப்பது, இலவச அரிசி,பருப்பு  வழங்குவது என அப்பகுதியின்  முருகன் பிரபலமாகி உள்ளார். 

முருகனுக்கு ஒரு பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் சின்ன வயசு கனவாம்.. அதுதான் லட்சியமாம். இதற்காகவே பாலமுருகன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி உள்ளான். முருகனின் முதல் படம் - மனாசா வினாவா என்பது. 50 லட்சம் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறான்.

அந்த படத்தில் நடித்த ஹீரோயினுக்கு வெறும் 6 லட்சம் ரூபாய்தான் சம்பளமும் தந்திருக்கிறான். இந்த படத்தில் கொள்ளையன் சுரேஷும் நடித்திருக்கிறானாம். ஆனால் இந்த படம் வெளியாகாமலேயே போய்விட்டது. இதனால் நொடிந்து போன முருகன், விட்டதை பிடிக்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் சின்ன சின்ன திருட்டு என ஆரம்பித்து, பிறகுதான் பெரிய திருட்டுக்கு மாறியுள்ளான்.

பெங்களூருவில் மட்டும் முருகன் மீது 180 கேஸ்கள் உள்ளனவாம். பிறகு 2011-ல் ஜாமீனில் பெங்களூருவில் இருந்து வெளியான முருகன் ஹைதராபாத் போய் தன் திருட்டை தொடர்ந்திருக்கிறான்.

 கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை வைத்து, 2-வது படம் ஆத்மா என்ற பெயரில் எடுக்கவும் ரெடி ஆனான். அது நடக்கவில்லை. கொள்ளை அடித்ததை கொண்டு சினிமா கம்பெனியில்தான் முதலீடு செய்ததாக ஏற்கனவே பெங்களூரில் போலீசிலும் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான். அங்கு நெருக்கடி முற்றியதால்தான் ஹைதராபாத்துக்கு வந்துவிட்டான். நகைக்கடை மட்டுமல்ல, வீடுகள், வங்கிகள் என எல்லா இடங்களிலும், எல்லா மாநிலங்களிலும் முருகனின் கைவரிசை உள்ளது.

Next Story