பிரதமர் மோடி - சீன அதிபர் 11-ந் தேதி வருகை சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு


பிரதமர் மோடி - சீன அதிபர் 11-ந் தேதி வருகை சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 7 Oct 2019 12:15 AM GMT (Updated: 6 Oct 2019 11:07 PM GMT)

11-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மறுநாள் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னையிலும், மாமல்லபுரத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை,

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளா தாரம் உள்ளிட்ட உறவுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் நல்லுறவை பேணி பாதுகாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஏற்கனவே சில முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர் கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இதற்காக சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் வருகிறார்கள். அன்று பகல் 1.30 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேரும் ஜின்பிங்குக்கு அங்கு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு முடிந்ததும் பகல் 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். ஓட்டலில் ஓய்வு எடுக்கும் சீன அதிபர் மாலை 4 மணிக்கு காரில் மாமல்லபுரம் செல்கிறார். கடைசி நேரத்தில் இதில் மாற்றம் செய்யப்பட்டு அவர் ஹெலிகாப்டரில் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

இதேபோல் அன்று சென்னை வந்து சேரும் பிரதமர் மோடியும் மாமல்லபுரம் செல்கிறார்.

மாமல்லபுரம் போய்ச் சேர்ந்ததும் அங்கு இரு தலைவர் களும் மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார்கள். மாலை 5.20 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். மாலை 5.45 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார்கள். பின்னர் கலை நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதன்பிறகு முக்கிய பிரமுகர் களை சந்திக்கிறார்கள்.

பின்னர் இரவு 9 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி வந்து ஓட்டலில் தங்குகிறார்.

12-ந் தேதி காலை 9 மணிக்கு ஜின்பிங் மீண்டும் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள். அப்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

பேச்சுவார்த்தைக்கு பின்னர், மதிய உணவை முடித்துக்கொண்டு பகல் 1.15 மணிக்கு ஜின்பிங் சென்னை புறப்பட்டு வருகிறார். சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில், வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகள் முடிந்து பிற்பகல் 2 மணிக்கு அவர் அங்கிருந்து சீனா புறப்பட்டு செல்கிறார்.

11-ந் தேதி சீன அதிபர் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும், புறப்பட்டு செல்லும் தினமும் சுமார் 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை அங்கு பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

சீன அதிபர் விமானத்திற்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் வர வேண்டிய விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5 மற்றும் 6-வது நுழைவு வாயிலை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக வர்ணம் தீட்டப்படுகிறது. விமான நிலைய சுவர்களில் இந்திய மற்றும் சீன கலாசார ஓவியங்கள் வரையப்படுகின்றன.

மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகே சாலையோரமாக புதிதாக பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

விமான நிலைய பகுதி, கிண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மெட்ரோ ரெயில் பாதை தூண்கள், மேம்பால சுவர்கள், காம்பவுண்டு சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் அல்லது ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து இருக்கிறது. இதற்காக ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சீனாவில் இருந்து வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது. சீன அதிபர் வருவதற்கு முன் அந்நாட்டின் சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வர உள்ளனர்.

சீன அதிபர் பயணம் செய்வதற்காக விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் மற்றும் சீன அதிபர் பயன்படுத்தும் பொருட்கள் சீனாவில் இருந்து 747 போயிங் சரக்கு விமானத்தில் சென்னைக்கு இன்னும் 3 நாட்களில் கொண்டுவரப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன அதிபரின் பாதுகாப்பு தொடர்பாக விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீசார், விமான நிலைய பாதுகாப்பு படை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையொட்டி மாமல்லபுரத்திலும், சென்னை நகரிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை விமான நிலையம், கிண்டி, மாமல்லபுரம் பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ரோந்து பணியை தீவிரப்படுத்துவது, வாகன தணிக்கையை அதிகரிப்பது, ஓட்டல்கள்-தங்கும் விடுதிகளை கண்காணிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜின்பிங் தங்க இருக்கும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தற்போது தங்கி இருப்பவர்களின் விவரங் களை போலீசார் சேகரிப்பதுடன், அவர்களுடைய பின்னணி பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

இரு பெரிய தலைவர்கள் மாமல்லபுரத்துக்கு வர இருப்பதையொட்டி, அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கலங்கரை விளக்கம், வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பு வேலிகளுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் எல்.இ.டி. விளக்கு கள் அமைக்கப்பட்டு உள்ளன. நகரில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

கடற்கரை கோவில் வளாக பகுதியில் புதிதாக புத்தர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில இடங்களிலும் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் காளை சிலைகளும் வைக்கப்பட உள்ளன.

வெண்ணெய் உருண்டை கல் பகுதியில் புதிதாக புல்வெளி அமைத்தல், நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதால், அந்த பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க நேற்று முதல் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொல்லியல் துறை நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மட்டுமே நேற்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வெளிப்புற நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சுற்றுலா வரும் பயணிகள் பலர் சாலையில் நின்றபடியே வெண்ணெய் உருண்டை கல்லை தொலைவில் இருந்து பார்த்துவிட்டு சென்றனர்.

பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் இப்பகுதியை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் நேற்று அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வியாபாரிகள், சிற்பிகள், மகளிர் அமைப்பினர், மீனவர்கள், கோவில் நிர்வாகிகள், இந்து அமைப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி-ஜின்பிங் வருகையின் போது மட்டும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரத்தில் மட்டும் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும், ஆயுத பூஜை, விஜயதசமியை கொண்டாட தடை இல்லை என்றும் கூறினார். தலைவர்கள் வருகையின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Next Story