சென்னை மெரினா கடற்கரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி சிறுமி பரிதாப சாவு
சென்னை மெரினா கடற்கரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்ததுடன், தனது கழுத்தையும் அறுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. அந்த நேரத்தில் விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரைக்கு பெண் ஒருவர் தனது பெண் குழந்தை உள்பட 2 குழந்தைகளுடன் வந்தார்.
அப்போது அந்த பெண் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கொண்டு வந்த கத்தியால் திடீரென தனது 2 குழந்தைகளின் கழுத்தையும் அறுத்துவிட்டு தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
சிறுமி பரிதாப சாவு
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததும் அருகில் இருந்தவர்கள் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மெரினா போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்தபோது, பெண் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மற்ற இருவருக்கும் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தாய் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், மகன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குடும்ப தகராறு
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி பவித்ரா (வயது 32) என்பதும், அவரது மகள் தனுஸ்யா (6), மகன் பத்மேஷ் (3) என்பதும் தெரியவந்தது.
மேலும், குடும்ப தகராறு காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்த பவித்ரா மெரினா கடற்கரையில், தனது குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து, தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story