விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் 12-ந்தேதி முதல் தொடங்குகிறார்


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் 12-ந்தேதி முதல் தொடங்குகிறார்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:30 PM GMT (Updated: 9 Oct 2019 10:29 PM GMT)

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் 12, 16, 18 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதன்படி, 12-ந்தேதி விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் பகல் 1 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, வி.சாத்தனூர், டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

16-ந்தேதி பகல் 2 மணிக்கு காணை, மாம்பழப்பட்டு, அரியலூர் திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய இடங்களிலும், 18-ந்தேதி விராட்டிக்குப்பம், தும்பூர், முட்டத்தூர், பனமலை, அன்னியூர், கடையம் ஆகிய பகுதிகளிலும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாங்குநேரி

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து 13, 14, 17 ஆகிய நாட்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13-ந்தேதி நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நாங்குநேரி பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

14-ந்தேதி ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம், 17-ந்தேதி கே.டி.சி.நகர், கிருஷ்ணாபுரம், முன்னீர்பள்ளம், பொன்னாக்குடி, சீவலப்பேரி ஆகிய இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story