மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த விஷப்பாம்புகள் பறிமுதல்


மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த விஷப்பாம்புகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:01 PM GMT (Updated: 10 Oct 2019 10:01 PM GMT)

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த விஷப்பாம்பு குட்டிகள் மற்றும் காட்டு பல்லிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் பாம்பு மற்றும் காட்டு பல்லிகள் உயிருடன் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு மலேசிய சுங்க இலாகா அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பர்வேஸ்(வயது 36), சிவகங்கையை முகமது அக்பர்(28) ஆகியோர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.

பாம்பு-பல்லிகள்

அதிகாரிகளிடம் அவர்கள் ஒருவித பதற்றத்துடன் பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 2 பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது சிறிய பெட்டிகளில் பாம்பு மற்றும் பல்லிகள் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து வண்டலூர் பூங்காவில் இருந்து கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அந்த பாம்பு, பல்லிகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

2 பேர் கைது

அந்த விலங்குகளை உரிய ஆவணங்கள் இன்றி மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து பச்சை மர மலைப்பாம்பு குட்டி, விஷப்பாம்பு குட்டி, காட்டில் வாழும் மரகத மரப்பல்லி, கருப்பு மரப்பல்லி, நீல மரப்பல்லி என 11 காட்டு பல்லிகள் மற்றும் 2 பாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக முகமது பர்வேஸ், முகமது அக்பர் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மலைபாம்பு, காட்டில் வாழும் பல்லிகள் போன்ற கொடிய விஷம் கொண்டவைகளை ஏன் சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story