நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.17¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.17¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 8:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:28 PM GMT)

விழுப்புரம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.17¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதி மீறலை கண்காணிப்பதற்காக 39 பறக்கும்படைகளும், 39 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகனசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை விழுப்புரத்தை அடுத்த கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் பறக்கும் படை அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

நகைக்கடை உரிமையாளர்

அப்போது அவர்கள் செஞ்சி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரில் இருந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் இருவரும் திருச்சி பெரிய கடைவீதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 43), அவரது மனைவி ஜெயவதி (40) என்பது தெரியவந்தது.

கோவிந்தராஜ், திருச்சியில் நகைக்கடை வைத்துள்ளார். அவர்கள் இருவரும் தங்கள் மகளின் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுத்துக்கொண்டும், நகை வாங்குவதற்காக பணம் எடுத்துக் கொண்டும் வந்ததாக தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அந்த பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story