‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் விசாரணை நடத்தாதது ஏன்? சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தேனி கோர்ட்டு சரமாரி கேள்வி


‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் விசாரணை நடத்தாதது ஏன்? சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தேனி கோர்ட்டு சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 11 Oct 2019 11:42 PM GMT (Updated: 11 Oct 2019 11:42 PM GMT)

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கல்லூரிகளில் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தவர்களிடம் ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், தேனி கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.

தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர் இர்பான் கோர்ட்டில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டாக்டர் வெங்கடேசன், முகமது ஷபி ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல், மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

நீட் தேர்வில் தேர்ச்சி

இதையடுத்து 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார்.

மாணவர் பிரவீண், சரவணன் தரப்பில் ஆஜரான வக்கீல் முருகதினகரன் வாதிடும்போது, ‘மாணவர் பிரவீண் நீட் தேர்வில் 130 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அவருடைய மதிப்பெண் மூலம் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் படிப்பில் சேர்ந்தார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து பிரவீண் மற்றும் அவருடைய தந்தைக்கு எதுவும் தெரியாது’ என்றார்.

இதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, ‘மாணவர் பிரவீண் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், அவருடைய பெயரில் வேறு ஒரு நபர் தேர்வு எழுதி பெற்ற 348 மதிப்பெண் அடிப்படையில் தான் அவர் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட பிரவீணின் வக்கீல், ‘மாணவர் தனது சான்றிதழ்களை தான் கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார். 3 கட்டங்களாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கல்லூரியில் தான் சான்றிதழ்கள் மாற்றப்பட்டு உள்ளது’ என்றார்.

மாஜிஸ்திரேட்டு கேள்வி

இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு, ‘இந்த வழக்கில் கல்லூரியில் சான்றிதழ்கள் சரிபார்த்த நபர்கள் முக்கிய சாட்சியாக உள்ளனர். கல்லூரியில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுவால் அவை சரிபார்க்கப்பட்டதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுவிடம் விசாரணை நடத்தப்பட்டதா? இந்த வழக்கில் இதுவரை யாரிடம் எல்லாம் விசாரணை நடந்துள்ளது? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்த பொது குறிப்பேடு (ஜி.டி. பதிவேடு) விவரங்களை இன்னும் ஏன் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இன்ஸ்பெக்டர், ‘கல்லூரியில் சான்றிதழ்களை சரிபார்த்தவர்களிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. பொது குறிப்பேடு விவரங்களை வருகிற 14-ந்தேதி சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்’ என்றார்.

14-ந்தேதி விசாரணை

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம், ‘இந்த வழக்கில் மாணவர்களிடம் இன்னும் ஏன் விசாரணை நடத்தவில்லை என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுவில் இடம்பெற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி அதன் விவரங்களை வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரியாக விசாரணை நடத்தினால், இந்த வழக்கு சரியான திசையில் செல்லும். எனவே ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வருகிற 14-ந்தேதி நடை பெறும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story