திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 11:48 PM GMT (Updated: 11 Oct 2019 11:48 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளை கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந்தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகன சோதனையில் பிடிபட்ட மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனிப்படை தேடுதல் வேட்டை

கொள்ளை கும்பல் தலைவனான முருகன் மற்றும் கூட்டாளி சுரேஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சுரேஷ் சரண் அடைந்தார். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கம் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வாடகை வீட்டில் சோதனை

இதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று முருகன் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை.

இது குறித்து விசாரித்தபோது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தான் முருகன் அந்த வாடகை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மேலும், அந்த வீட்டில் 2 கார்கள், பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கை அறை, 3 ஏ.சி.க்களுடன் அவர் சகல வசதிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.

வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி

முருகன் தினமும் இரவு நேரத்தில் தனது வளர்ப்பு நாயுடன் அவர் தங்கி இருந்த வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது யாராவது அவரிடம் பேச்சு கொடுத்தால் நன்றாக பேசுவாராம். சமீபத்தில் பெய்த மழையால் அந்த சாலை சேதம் அடைந்து இருந்துள்ளது. முருகன் தனது செலவிலேயே சாலையை சீரமைத்து தருவதாக அந்த பகுதியினரிடம் கூறி உள்ளார். மேலும், தான் தங்கி இருந்த வீட்டில் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளார். அந்த பெண்ணுக்கு முருகன் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனுக்கு வீட்டை ரூ.6 ஆயிரம் மாத வாடகைக்கு விட்ட அப்துல்காதர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 1-ந்தேதி முருகன் அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாகவும், போகும்போது தன்னிடம் சொல்லாமல் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு போய் விட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜையை கொண்டாடினார்

ஆயுதபூஜை தினத்தில் முருகன் திருவெறும்பூர் அருகே தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்து பூஜையை கொண்டாடியதாகவும், அப்போது தனது வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு ரூ.1,000-மும், இனிப்பும் வழங்கிவிட்டு இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

முருகன் செல்போன் பயன்படுத்தாததால் அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று அவரை தேடி வந்தனர்.

பெங்களூரு கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முருகன் நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வக்கீலுடன் பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அங்கு நீதிபதி நாகம்மா முன்னிலையில் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அப்போது நீதிபதியிடம், முருகன் மீது கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு பானசாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக அவர் சரண் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல் பானசாவடி போலீசாரும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையர்களான முருகன், சுரேஷ் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்து இருப்பது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story