திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் மீட்பு


திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 11:56 AM GMT (Updated: 12 Oct 2019 11:56 AM GMT)

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 11 கிலோ நகைகள் இன்று மீட்கப்பட்டு உள்ளன.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந்தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (45), அவரது அக்காள் மகன் சுரேஷ் (28) உள்பட 8 பேர் கொண்ட கும்பல் லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கிடையே திருவாரூர் விளமல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவரிடம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் இருந்தன.

இதையடுத்து வாகன சோதனையில் பிடிபட்ட மணிகண்டன், தலைமறைவான சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சுரேஷ் சரண் அடைந்தார். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே திருச்சி திருவெறும்பூரில் வேங்கூர் அருகே நறுங்குழல்நாயகி நகர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து முருகன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இல்லை.

முருகன் செல்போன் பயன்படுத்தாததால் அவர் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முருகன் நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வக்கீலுடன் பெங்களூரு எம்.ஜி.ரோடு அருகே மேயோ ஹாலில் உள்ள பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அங்கு நீதிபதி நாகம்மா முன்னிலையில் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அப்போது நீதிபதியிடம், முருகன் மீது கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு பானசாவடி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதிவாகி உள்ளதாகவும், அந்த வழக்கு தொடர்பாக அவர் சரண் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகம்மா உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

அவரை லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதேபோல் பானசாவடி போலீசாரும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

இதனிடையே, முருகன்  அளித்த தகவலின்பேரில் பெங்களூரு போலீசார் 11 கிலோ நகைகளை மீட்டு சென்றனர்.  ஆனால், உரிய அனுமதி இன்றி நகைகளை எடுத்து சென்ற தகவலை அறிந்த பெரம்பலூர் போலீசார், பெங்களூரு போலீசார் சென்ற வாகனம் பின்னே துரத்தி சென்று அவர்களிடம் இருந்த நகைகளை மீட்டுள்ளனர்.  பின்பு அந்த நகைகளை ஆய்வு செய்ததில், அவை திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளையடித்த நகைகள் என தெரிய வந்துள்ளது.

Next Story