சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி


சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 13 Oct 2019 8:33 PM GMT)

சீன அதிபர் சென்னைக்கு வந்ததையொட்டி, போலீசார் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நன்றி தெரிவித்து வயர்லெஸ் மூலம் பேசினார்.

சென்னை,

சீன அதிபர் ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் நரேந்திரமோடியும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார்கள்.

சீன அதிபர் ஜின்பிங் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது வருகையையொட்டி சென்னை நகர போலீசார் 10 நாட்கள் இரவு-பகலாக ‘ஷிப்டு’ முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திரமோடியும் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்றபிறகுதான் போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மிக முக்கிய தலைவரான சீன அதிபர் சென்னைக்கு வருகை தந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சென்னை போலீசாருக்கு ஒரு சவாலாக இருந்தது. பாதுகாப்பு பணிகளை மிகவும் நுட்பமான முறையில் செய்திட விரிவான ஏற்பாடுகளை செய்தோம்.

சீன அதிபர் தங்கியிருந்த கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து சென்னை போலீஸ் எல்லையான முட்டுக்காடு வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் சீன அதிபர் சாலை மார்க்கமாக செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

மிக முக்கியமான தலைவர் சாலை மார்க்கமாக செல்லும்போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். குறிப்பிட்ட 35 கிலோமீட்டர் தூரத்தையும் 110 சப்-இன்ஸ்பெக்டர்களோடு, 200 போலீசார் அடங்கிய மிகப்பெரிய படையை அமைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆய்வு செய்தோம்.

அந்த சாலையின் இரு பகுதிகளிலும் உள்ள வீடுகள், நிறுவனங்கள், தங்கியிருக்கும் பொதுமக்கள் பணியாற்றும் அலுவலர்களை கணக்கெடுத்தோம். அந்த சாலையின் இருபக்கமும் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்கள், சாலையின் குறுக்கே உள்ள பாலங்கள் போன்றவற்றையும் கணக்கெடுத்து போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

சீன அதிபர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலை சுற்றியிருந்த பகுதிகளையும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தோம். அந்த நட்சத்திர ஓட்டலுக்கு எதிரில்தான் மெட்ரோ ரெயில் பாதை உள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மெட்ரோ ரெயில் பாதையும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. மெட்ரோ ரெயிலில் தினமும் போலீஸ் படையினர் பயணித்து கண்காணித்து வந்தனர்.

சீன அதிபர் வருகைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பட்டியலை தயாரித்தோம். சென்னையில் தங்கியிருந்த அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

வெளிமாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வருபவர்களையும் பட்டியலிட்டோம். அவர்கள் எந்தெந்த வழியாக சென்னைக்கு வருவார்கள்? என்பதையும் கண்டுபிடித்து முன்கூட்டியே அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தோம்.

முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றத்தையும் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக கண்காணித்தோம்.

சீன அதிபர் வருகையின்போது சாலையின் இரண்டு புறங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒரு இடத்தில் கூட போக்குவரத்தை நிறுத்தியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திட்டமிட்டு மிகவும் நுட்பமாக பாதுகாப்பு பணிகளை கையாண்டதால் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை நகர போலீசாரின் பாதுகாப்பு பணிக்கு பாராட்டு தெரிவித்தும், ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் இரவு வயர்லெஸ் மூலம் பேசினார்.

Next Story