‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்


‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 13 Oct 2019 11:00 PM GMT (Updated: 13 Oct 2019 9:39 PM GMT)

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

தேனி,

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 11-ந்தேதி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.

அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் படித்து வந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்கள் சரிபார்த்த குழுவினரிடம் ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்று மாஜிஸ்திரேட்டு கேள்வி எழுப்பினர். மேலும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி 14-ந்தேதி (இன்று) விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆள்மாறாட்டத்தில் மாணவர்கள், மாணவிகள் சிக்கிய தேனி அரசு மருத்துவ கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி, பாலாஜி மருத்துவ கல்லூரி, ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி, சவீதா மருத்துவ கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரியில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் உள்பட 8 பேர், எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 10 பேர் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று காலை 9.30 மணியளவில் வந்தனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சித்ராதேவி விசாரணை நடத்தினார். அவர்களிடம் பிற்பகல் 3.30 மணி வரை விசாரணை நடந்தது. பின்னர் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் போது எந்த மாதிரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது? ஆள்மாறாட்டம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு பணியின்போது சந்தேகம் எழுந்ததா? சரிபார்க்க தவறியது ஏன்? சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களை இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் எழுப்பியதாக கூறப்படுகிறது.

மாலை 5 மணியளவில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து அலுவலர்கள் 2 பேர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மற்ற கல்லூரிகளில் இருந்து நேற்று மாலை வரை விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை. விசாரணை அறிக்கை இன்று (திங்கட்கிழமை) தேனி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story