மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 7:54 AM GMT (Updated: 14 Oct 2019 7:54 AM GMT)

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சீமானின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாரிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு காரணமாக மதுரவாயலில் உள்ள சீமானின் வீடு மற்றும் போரூர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story