தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...


தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்...
x

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 11 மாத குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கோவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து டெங்குவின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விதமான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளான மேலூர், கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு பல்வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 75 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தனிப்பிரிவில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் மற்றும் அறிகுறியுடன் சென்னையில் தினமும் 500 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ராஜீவ்காந்தி அரசு  ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பால் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். டெங்கு அறிகுறி உள்ள 150 முதல் 200 வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் சராசரியாக 40 முதல் 50 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி  மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதித்து வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை, ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் ரத்து பரிசோதனை கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

Next Story