அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா : எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்


அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா : எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:55 PM GMT (Updated: 14 Oct 2019 10:55 PM GMT)

அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்.

சென்னை, 

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) 48-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர்., கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு.

விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 17.10.2019 அன்று ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து, கட்சி கொடிக் கம்பங்களுக்கு புதுவண்ணம் தீட்டி, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே போல், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2019 அன்று ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story