நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்


நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்
x
தினத்தந்தி 16 Oct 2019 2:08 PM GMT (Updated: 16 Oct 2019 2:08 PM GMT)

நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் பேசியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வி. நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

முதற்கட்டமாக விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 12ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முண்டியம்பாக்கத்தில் பிரசாரத்தை தொடங்கி, ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி வி.சாத்தனூர்,  டி.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

2வது கட்டமாக இன்று மாலை காணை பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.  அவரது தேர்த்ல் பிரசாரத்தினை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக காணை பகுதியில் கூடியிருந்த தொண்டர்களிடையே பேசும்பொழுது, நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்.  அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள்.  தி.மு.க.வை நம்பி தமிழக பெண்கள் ஏமாந்து விட்டார்கள் என பேசினார்.

இதேபோன்று, நந்தன் கால்வாய் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.  அதனை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும் அவர் பேசினார்.

தொடர்ந்து, மாம்பழப்பட்டு, அரியலூர், திருக்கை, கெடார், சூரப்பட்டு, திருவாமாத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் அவர் ஈடுபடுகிறார்.

Next Story