நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு


நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:16 PM GMT (Updated: 17 Oct 2019 4:16 PM GMT)

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்துள்ளார்.

நாங்குநேரி,

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தகவல் வெளியானது.  பணம் விநியோகித்தவர்களை பொதுமக்களே பிடித்து வைத்துள்ளனர் என்று வெளியான தகவலை தொடர்ந்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தினர்.

நாங்குநேரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக சங்கர சுப்பிரமணியன் என்பவர் போட்டியிடுகிறார்.  அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.  அதில், நாங்குநேரி தொகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிப்பதால் தேர்தலை அக்டோபர் 21ந்தேதிக்கு பிறகு நடத்த உத்தரவிட வேண்டும்.  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Next Story