அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 18 Oct 2019 1:18 PM GMT (Updated: 18 Oct 2019 1:18 PM GMT)

அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

சென்னை,

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவை அடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதியை தமிழக அரசு, மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் பொது விடுமுறையாக அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. 

இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் முதல் மற்றும் பொது ஷிப்டுகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மதியம் மற்றும் இரவு நேர ஷிப்ட்களில் பணியாற்றிய ஊழியர்கள், தங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

இதை ஏற்க மறுத்த நிர்வாகம், ஜூலை 30 ம் தேதி விடுமுறை அறிவிப்பதாக இருந்தால், விடுமுறை தினமான ஆகஸ்ட் 8 ம் தேதி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர், ஜூலை 30 ம் தேதி பணிக்கு செல்லவில்லை. அதன் காரணமாக அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியம் வழக்கப்படவில்லை.

இதை எதிர்த்து தொழிற்சங்கம் சார்பில், சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 47 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டப்பட்டது.  தொழிலாளர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என தெளிவுபடுத்தினார். மேலும், நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க நிறுவனம் முன்வந்த போதும் அதை ஏற்காத ஊழியர்கள், அன்றைய தினத்திற்கு ஊதியம் பெற உரிமையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Next Story