எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது
எட்டாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆயிரக்கணக்கான பெண் சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் வீட்டில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருக்கலைப்புக்கு உதவியதாக ஆனந்தி என்பவரை கடந்த 2015-ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வெளியே வந்த ஆனந்தி மீண்டும் பழைய தொழிலை செய்த நிலையில் 2016- ல் கைது செய்யப்பட்டார். ஆனந்தியை சென்னை மருத்துவ பணிகள் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்ததுடன் அவரது வீட்டில் இருந்த கருக்கலைப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர். அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் 2018ம் ஆண்டு வேங்கிக்கால் பகுதியில் புதிய சொகுசு வீடு ஒன்றை வாங்கி பழையபடி கருக்கலைப்பில் சட்டவிரோதமாக ஆனந்தி ஈடுபட்டுள்ளார். இடைத்தரகர்கள் உதவியுடன் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தி அவரது கணவர் மற்றும் இடைத்தரகர் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான கருக்கலைப்பு செய்த ஆனந்தியை ஆட்சியர் கந்தசாமி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி மீண்டும் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக விழுப்புரம் எஸ்.பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் தற்போது மீண்டும் போலீசாரிடம் ஆனந்தி சிக்கியுள்ளார்.
அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சியில் வீடு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதை ஆனந்தி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story