அ.தி.மு.க.வே ஆள வேண்டும் என்பதற்கு இந்த வெற்றியே சான்று; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


அ.தி.மு.க.வே ஆள வேண்டும் என்பதற்கு இந்த வெற்றியே சான்று; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2019 7:35 AM GMT (Updated: 24 Oct 2019 7:35 AM GMT)

அ.தி.மு.க.வே ஆள வேண்டும் என்பதற்கு இந்த வெற்றியே சான்று என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார்.

இந்த இரு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.  இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதுவரை 14 சுற்றுகள் முடிவில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் முறையே 81,460 மற்றும் 42,250 ஆகிய வாக்குகள் பெற்று அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.  இவற்றில் தி.மு.க. முறையே 49,091 மற்றும் 29,420 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், மேளங்கள் முழங்க ஆடி, பாடியும் தலைவர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்ற நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.  இதனிடையே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வே ஆள வேண்டும் என்பதற்கு இந்த வெற்றியே சான்றாக உள்ளது.  தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கூறி இதற்கு முன்பு வெற்றி பெற்றது என கூறியுள்ளார்.

Next Story