ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை; 37 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தீவிரம்


ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை; 37 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Oct 2019 1:26 AM GMT (Updated: 27 Oct 2019 1:26 AM GMT)

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமடைந்து உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.

இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.  மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.

அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டனர்.

விடிய, விடிய கலாமேரி அமர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் நேற்று காலையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் வீட்டில் வைத்து கலாமேரிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

2வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளியின்றி தொடர்ந்தது.

திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

நேற்று பகல் 1.10 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய பேரிடர் மீட்பு படையினரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.  மாலை 5 மணியளவில் நவீன கருவியை சிறுவனின் உடலில் பொருத்தி கிரேன் மூலம் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  5 மணி முதல் 6.30 மணி வரை நடந்த இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து குழந்தையை மீட்பதற்காக காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது.

இந்த லாரி திருச்சியை தாண்டி மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தபொழுது, நேற்று இரவு 11.30 மணி அளவில் பூலாங்குளத்துபட்டி என்ற இடத்தில் பழுதடைந்து நின்றது.  இது குழந்தை சுஜித்தை மீட்பதில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன்பின்பு பழுது சரி செய்யப்பட்டு ரிக் வாகனம் நடுக்காட்டுப்பட்டி கிராமம் வந்தடைந்துள்ளது.  இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணறு அருகே பக்கவாட்டில் மற்றொரு குழி தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்த பணிகள் முடிய மதியம் வரை ஆகும் என கூறப்படுகிறது.  இந்நிலையில், 100 அடி ஆழத்தில் குழந்தை சென்றுள்ளது.  இதனால், குழந்தை கீழே சென்று விடாதபடிக்கு அதன் கையை ஏர் லாக் முறையில் கட்டிப்போட்டு உள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 2 மீட்டர் தொலைவில் 110 அடி ஆழத்திற்கு மற்றொரு துளை போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.  இதற்காக ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.  குழந்தையை மீட்க 37 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Next Story