இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - ரவீந்திரநாத் எம்.பி.


இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது - ரவீந்திரநாத் எம்.பி.
x
தினத்தந்தி 28 Oct 2019 10:39 AM GMT (Updated: 28 Oct 2019 10:39 AM GMT)

தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி வெற்றி பெறும் என நம்பலாம். இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என ரவீந்திரநாத் எம்.பி. கூறினார்.

சென்னை,

நெடுக்காட்டுப்பட்டி  கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், முன்னதாக பல முறைகள் கையாளப்பட்டாலும் அனைத்தும் தோல்வியை சந்தித்தன. 

குறிப்பாக குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையை மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதில் மூன்று துளைகள் தற்போது 65அடி ஆழத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 36 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குழந்தை துளையில் சிக்கி தற்போது,70 மணி நேரம் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆய்வு செய்தார்.  மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன்  ரவீந்திரநாத் எம்.பி.யும் சென்று இருந்தார்.

மீட்பு பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் லதா ரஜினிகாந்த்.

மீட்பு பணிகள் குறித்து ரவீந்திரநாத் எம்.பி. கூறியதாவது:-

குழந்தையை மீட்பதில் தமிழ்நாடு அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி வெற்றி பெறும் என நம்பலாம்.  இன்று இரவுக்குள் குழந்தையை மீட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

Next Story