குழந்தை சுஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்


குழந்தை சுஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர்  மோடி கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:46 AM GMT (Updated: 28 Oct 2019 12:26 PM GMT)

குழந்தை சுஜித்தை மீட்கும் பணி குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 66 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது. 

ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தில் தீயணைப்பு படை வீரர் இறங்கினார் . ஏணி மூலம் இறங்கிய வீரர் பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை மீட்புப்பணி நடக்கும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆய்வு செய்தார்.  மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் ரவீந்திரநாத் எம்.பி.யும் சென்று இருந்தார்.

குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையை மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதில் மூன்று துளைகள் தற்போது 65அடி ஆழத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 36 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குழந்தை, துளையில் சிக்கி தற்போது 70 மணி நேரம் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'குழந்தை சுஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்' குழந்தையை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மீட்புப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

Next Story