குழந்தை சுஜித்தின் நிலை கண்டு எனது நெஞ்சு பதைபதைக்கிறது; வைகோ பேட்டி


குழந்தை சுஜித்தின் நிலை கண்டு எனது நெஞ்சு பதைபதைக்கிறது; வைகோ பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2019 12:49 PM GMT (Updated: 28 Oct 2019 12:49 PM GMT)

குழந்தை சுஜித்தின் நிலை கண்டு எனது நெஞ்சு பதைபதைக்கிறது என்று வைகோ பேட்டியில் கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணி கடந்த 72 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.

குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீட்டர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையை மூன்று துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதில் மூன்று துளைகள் தற்போது 65அடி ஆழத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 36 மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குழந்தை, துளையில் சிக்கி தற்போது 72 மணி நேரம் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.  இதனால் குழி தோண்டும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இதனிடையே திருச்சி நடுக்காட்டுப்பட்டிக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.  அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் 4 நாட்களாக இங்கே இருக்கிறார்கள்.  குழந்தை சுஜித்தின் நிலை கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது.  அந்த குழந்தையின் நிலையையும், குடும்பத்தினரின் நிலையையும் நினைத்து வருந்துகிறேன்.

ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு கட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  குழியை தோண்டினால் மக்கள் அதனை மீண்டும் மூடுவதில்லை.  குழந்தையை மீட்பதற்கான நவீன உபகரணங்கள் இல்லை.  இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story