சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்


சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! - திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 29 Oct 2019 1:52 AM GMT (Updated: 29 Oct 2019 1:54 AM GMT)

சுஜித் நம் நினைவில் இருந்து என்றும் நீங்க மாட்டான் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 

80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், சுஜித் நம் நினைவில் இருந்து என்றும் நீங்க மாட்டான் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “  நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். 

சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! ” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story