சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி


சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 29 Oct 2019 1:31 PM GMT (Updated: 29 Oct 2019 1:31 PM GMT)

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்றன.  எனினும், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகள் பலனின்றி சுஜித் அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்து விட்டான் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது.  பின்பு முறைப்படி சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குழந்தை சுஜித்தின் வீட்டிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  பின்பு குழந்தை சுஜித்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.  அவருடன் சென்ற துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சுஜித்தின் உருவ படத்திற்கு அஞ்சலி  செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, 

கடந்த வெள்ளி கிழமை மாலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்தவுடன் அதுபற்றிய தகவல் அறிந்து, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் மீட்பு பணியில் துரிதமுடன் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மக்கள் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தனியார் நிறுவனத்தினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.  எனினும் அது பலனளிக்கவில்லை என்று கூறினார்.  

பின்னர், சுஜித் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினையும், வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

Next Story